Archives: ஜனவரி 2017

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

மறுபடியும் கட்டி எழுப்புதல்

எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும் ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.

இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெரிசிய ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).

நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

எப்பொழுதும் நேசிக்கப்பட்டு, எப்பொழுதும் மதிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

நாம் வேலை செய்து நம்முடைய குடும்பங்களை போஷிக்கவும், தான் சிருஷ்டித்த இவ்வுலகை பொறுப்போடு பராமரிக்கவும் தேவன் விரும்புவது உண்மையே. சொல்லப் போனால் நம்மை சுற்றியுள்ள பெலனற்றவர்கள், பசியுள்ளவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தாகமாயிருப்பவர்கள் மற்றும் மனமுடைந்த அனைவருக்கும் ஊழியஞ்செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளாதவர்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

இதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஏனென்றால் “தேவனுக்காக செய்ய” உதவும் நம்முடைய பெலன் சுகவீனத்தினாலோ, தோல்வியினாலோ, எதிர்பாராத பேரழிவினாலோ நம்மிடமிருந்து கிழித்தெறியப்படும் காலமும் வரலாம். அப்பொழுது நாம் தேவனுக்காக செய்யும் வேலைக்காக அவர் நம்மை நேசியாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்! இரட்சிப்படையும்படி கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தது முதல், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டயமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது” (ரோம. 8:36,39).

நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டாலும் அல்லது நம்மிடமுள்ள அனைத்தையும் நாம் இழந்து போனாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்பது ஒன்றைத் தான். அது அவருக்குள் உள்ள நம்முடைய அடையாளத்தில் இளைப்பாறுவதையே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.